அழகியல் வாழ்க்கை



என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,
இதை சொல்வதற்கு, நான் யாராகவும் இருக்க வேண்டியது இல்லை!.

யாராகவோ இருந்தே இதை எழுதுகிறேன்!

எனக்குப் பசிக்கிறது,
அதற்காய், பணம் ஈட்டுகிறேன்,
மறந்து போன என் பசியோடு!
ஆதலால்,
அதனாலும்,
என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,

தொடர்ந்து வரும் உறவுகள்,
சுமந்து வந்த கனவுகள்,
வலிகளைத் தருகின்றன!
காயங்கள் தந்த வடுக்கள் தான்,
எனக்கான மருதாணி என்றானது!
ஆதலால்,
அதனாலும்,
என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,

கடந்து போகும் ஒவ்வொரு நொடியும்,
ஆயிரம் கேள்விகளை எழுப்பி விட்டு செல்கின்றன,
விடை தேடி அலையும் என் பயிற்சியும்,
கேள்விகளையே தொலைக்க முயலும் என் முயற்சியும்!
ஆதலால்,
அதனாலும்,
என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,

தேடிக் கிடைத்த மரியாதைக்குரிய நட்பு,
என்னை இன்னும் அழகாய் செப்பனிட்ட நட்பு,
ஏற்றமிகு எண்ணங்களை பகிர்த்து கொண்ட நட்பு,
அதையும் தொலைத்து விட்டு வந்த போதும்,
தனிமையில் கரைந்த போதும்....
ஆதலால்,
அதனாலும்,
என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,



இன்னும் தேடிக் கொண்டே இருக்கும் காதலையும்,
உன்னோடு வாழ்வதற்காய், சேர்த்து வைத்திருக்கும்,
என் திறக்கபடாத நாட்களும்,
தொடர்ந்து பெருகிக் கொண்டிருக்கும் என் காதலும்!
என என்னுள் நானே, அகதியாய் உழன்று கொண்டிருந்தும்...
ஆதலால்,
அதனாலும்,
என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,

என்னுளே இருக்கும் இறையை மட்டும் நான் உணர்ந்து இருந்தால்,
நீங்கள் சந்தோசமாய் இருந்திருப்பீர்கள்!
என்னுள்ளே இருக்கும் மிருகத்தை மட்டும் நான் உணர்ந்து இருந்தால்,
நான் சந்தோசமாய் இருந்திருப்பேன்!
ஆனால், இரண்டையும் எழுப்பி விட்டு,
மோத விட்டு, எது ஜெயித்த போதும்,
அழுவது என்னவோ இந்த சாமான்ய மனிதப் பிறவி தான், என்றாலும்....
ஆதலால்,
அதனாலும்,
என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,


ஆகையால்......
இந்த அழகியல் உணர்வை தந்த வாழ்க்கை எனக்கு பிடித்து இருக்கிறது!



Sunday, July 4, 2010 at 7:19 PM

4 Comments to "அழகியல் வாழ்க்கை"

Beautiful lines ramya.. feel so good to read them...
i m realising the reality and truth in all these lines..
you ve very beautifully portrayed that all those things in life that people usually crib about are indeed the ones that sculpt our lives for the future..
and enjoying these feelings and understanding them will make life truly beautiful... very true... Lovely!

நடக்குறத அப்புடியே ஏத்துக்கிட்டு அனுபவிக்க பழகிக்கிட்டோம்னா!!!

இத எழுதுவதற்கு நல்லாயிருக்கு நடைமுறையில் ரொம்ப கஷ்டம். அருமையா வெளிப்படுத்தியிருக்கீங்க.

இப்புடி அடிக்கடி கமெண்ட் போட்டு உங்கள் தனிமையை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. தொடருங்கள் உங்கள் எண்ணப்பதிவுகளை.

நன்றி சமீர்! உங்களது எண்ணப் பதிவுக்கும், என் எண்ணங்களை மதித்த உங்களின் மேன்மைக்காகவும்!
வரவேற்கிறேன் உங்களின் பதிவை!

//காயங்கள் தந்த வடுக்கள் தான்,
எனக்கான மருதாணி என்றானது!//

வலி எனக்குப் பழகிப் போன ஒன்று....அசாத்தியமாய் மிரட்டியிருக்கிறாய்!

//விடை தேடி அலையும் என் பயிற்சியும்,
கேள்விகளையே தொலைக்க முயலும் என் முயற்சியும்//

விடை தேடி....அலையும் பயிற்சியில் கேள்விகள் அழிந்து போகும்...பதிலே இல்லாத போது கேள்விகள் மட்டும் எதற்கு....முயன்று முயன்று தொலைக்கத்தான் அல்லது மறக்கத்தான் வேண்டும் கேள்விகளை..!


//இன்னும் தேடிக் கொண்டே இருக்கும் காதலையும்,
உன்னோடு வாழ்வதற்காய், சேர்த்து வைத்திருக்கும்,
என் திறக்கபடாத நாட்களும்,
தொடர்ந்து பெருகிக் கொண்டிருக்கும் என் காதலும்!
///

ரொம்பவே படுத்துது இந்த வரிகள்....திறக்கப்படாமல்...ரொம்ப ரகசியமாய் புதுசாய்....ம்ம்ம் காத்திருப்பின் வலியும்...எதிர்பார்ப்பில்...இருக்கும் புனிதம்...பளீச் என்று புடிபடுகிறது.....

//இந்த அழகியல் உணர்வை தந்த வாழ்க்கை எனக்கு பிடித்து இருக்கிறது!

//

எனக்கும் தான் பிடித்திருக்கிறது....அழகான ஒரு ஒவியமான இந்த இந்த கவிதையை...!


இப்போ நான் என்ன பண்ணப் போறேன்...என்னையே ரசிக்கும் என் ரசிக்கும் ரசிப்புத்தன்மை கூடிவிட்டதே....இல்லை இல்லை...கூட்டிவிட்டதே இந்தக்கவிதை....இந்தக் கவிதை தந்த உணர்வை...ஒரு கவிதையில் சொல்ல முயற்சிக்கவா? கேட்கிறது ... மனம்...!

மொத்தத்தில்...........அட்டகாசம் ரம்யா....!

Post a Comment